தியானமுகாம், தில்லை – கடிதம், விஜயகுமார் சம்மங்கரை

தியானமுகாம், தில்லை – கடிதம், விஜயகுமார் சம்மங்கரை

அன்புள்ள ஜெ,

2020ல் பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய வாசகர் சந்திப்பு நடந்தது. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து நடந்த சந்திப்பு. அதில் பல பேர் கலந்து கொண்டார்கள். இன்று யோசித்துப் பார்த்தால் அந்த வகுப்பில் கலந்து கொண்ட பலர் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் பெரிய பெரிய செயல்களை முன்னெடுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

உதாரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் பார்கவி இருவரும் இம்பர்வாரி என்ற அமைப்பை உருவாக்கி அதில் கம்பராமாயணம் தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இதுவரையில் சுமார் 3500 பாடல்களை முழுமையாக முடித்துள்ளார்கள். இன்னும் சில வருடங்களில் பத்தாயிரம் பாடல்களையும் பயின்று முடித்து விடுவார்கள்.

அதே வகுப்பில் எழுத்தாளர் ரம்யாவும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழ் விக்கிக்கு ஆற்றி வரும் பணிகள் நாம் அறிந்ததே. அவர் ஆரம்பித்த நீலி இதழ் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். வெகு விரைவில் அது தொகுப்பாக வரும் என்று நினைக்கிறேன்.

வகுப்பில் எங்களுடன் கலந்து கொண்ட மற்றொருவர் ராஜேஷ் கண்ணன். அவர் புகைப்படம் எடுப்பதில் வல்லுனராக உருவாகியுள்ளார். இப்படி பலர் அந்த புதிய வாசகர் சந்திப்பிற்கு பிறகு சொல்லத் தகுந்த ஆளுமைகளாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதார ஊக்கத்தை அந்த வகுப்பில் இருந்து நாங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டோம்.

இதில் நான் முக்கியமாக கூற விரும்புவது தில்லை அவர்களைப் பற்றி. அவர் எனது யோக ஆசிரியர். பத்து வருடங்களுக்கு முன்பே அவரிடம் நான் யோகம் பயின்று உள்ளேன். புதிய வாசக சந்திப்பின் மூலம் அவரை மீண்டும் நான் அறிமுகம் செய்து கொண்டது எனது நல்லூழ் என்றே நினைக்கிறேன். அந்த வகுப்பிற்கு பிறகு தில்லை அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளேன் அவர் எனக்கு ஆசிரியராகவும் நண்பராகவும் இருக்கிறார். நாங்கள் இருவரும் சொல்முகம் மாதாந்திர கூடுகைக்கு இணைந்து சென்று வருவோம். மேலும் தங்களின் அனைத்து படைப்புகளையும் அவர் வாசித்துள்ளார். வெண்முரசை முழுமையாக படித்தவர். வெண்முரசு பற்றி என்னிடம் மணிக்கணக்கில் ஆர்வமாக பேசக் கூடியவர். அவர் பேசுவதை கேட்கவே பிரதிவாரம் அவரை சந்திக்கும் வழக்கம் எனக்கு உண்டு.

கடந்த 20 வருடங்களாக பல்வேறு யோக வகுப்புகளை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்காக பிரத்தியேக கட்டணம் ஏதும் அவர் பெறுவதாக எனக்குத் தெரியவில்லை. பல்வேறு இலவச வகுப்புகள் அவர் எடுப்பது எனக்கு தெரியும். இதெல்லாம் அவர் சொந்த ஆர்வத்தின் காரணமாக செய்து கொண்டு வருகிறார். தனக்கு கிடைத்ததை மற்றோருவருக்கு பகிரும் அவரது ஆர்வமும் அர்ப்பணிப்போம் வணங்கத் தக்கதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது இதற்காக அவர் உழைக்கிறார். இதனால் கிடைக்கின்ற அகநிறைவையே இதற்கான ஊதியமாக அவர் கருதுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன்.

ஆனந்த சைதன்யம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் யோகம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் அந்த அமைப்பின் மூலம் பல ஏழை கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்திற்காக நிதியுதவி செய்து வருகிறார். அதற்கான நிதியை அவரும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய தனிப்பட்ட சேமிப்பிலிருந்தே செய்து வருகிறார்கள். தங்களது வருமானத்தில் ஒரு பெரும் தொகையை இதற்காகவே செலவிடுகிறார்கள். தன்னலமற்ற இந்த செயலை வெளியே இவர் சொல்வதே இல்லை.

இதை அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டே செய்கிறார். நாளொன்றுக்கு சராசரியாக பனிரெண்டு முதல் பதினைந்து மணி நேரம் அவர் எதேனும் ஆக்கப்பூர்வ செயலுக்காகவே செலவிடுகிறார் என்பதை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் நேரமின்மை என்று குறைபட்டுக் கொள்வதே இல்லை.

ஒரு தகுதியுடைய மாணவனை தேர்வு செய்ய இவர் எடுத்துக்கொள்ளும் அவகாசமும் உழைப்பும் பெறுமதிப்பிற்குரியது. அந்த குழந்தை தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சென்று கண்டு வருகிறார். நல்ல மதிப்பெண் உடைய பல குழந்தைகள் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம் இல்லாமையால் நின்று விடுகிறார்கள். தில்லை கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் விடுத்திக்கட்டணம், புத்தகங்கள், உடைகள் என்று ஏற்பாடு செய்கிறார்.

வருடம் இரண்டு முறை நடக்கும் இந்த ‘கற்கை நன்றே’ என்ற நிதியுதவி ஒரு நிகழ்ச்சியாக அல்லாமல் ஒரு விழாவாக கோவையில் நடைபெறுகிறது. அதற்காக மாணவர்களை தங்கள் பெற்றோருடன் கோவை வரவழைத்து அவர்களை சிறப்பாக உபசரித்து கல்விக்கான நிதியை அந்த மாணவர்கள் கையிலோ அல்லது அவர்களது கல்லூரி வங்கிக்கணக்கிலோ ஒப்படைக்கிறார்.

அவர்கள் உதவி பெறுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் அது ஒரு பெரும் கொண்டாட்டமாகவே நடைபெறுகிறது. கூட்டு தியானம், கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, எழுத்துப்போட்டி, மதிய உணவு, அனுபவ பகிர்வு, மேற் கல்விக்கான கலந்தாலோசிப்பு என்று அந்த விழா ஒரு ஆக்கபூர்வ நிகழ்வாக இருக்கும். குறிப்பாக அந்த குழந்தைகள் வெளிப்படுத்தும் கல்விக்கான நல்வாழ்வுக்கான விருப்பு அவர்களது விழிகளில் தழலாடும். அன்று அந்தியில் அந்த குழந்தைகள் கண்ணீருடன் விடைபெறுவதை பல முறை கண்டிருக்கிறேன்.

நான் இதுவரை எந்த நிதியுதவியும் செய்ததில்லை. எனது பங்கு இந்த மகத்தான நிகழ்வில் வெறும் கைங்கரியம் என்ற அளவிலேயே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்கு தில்லை அவர்கள் இந்த கைங்கரியத்தையே கர்ம யோகமாக சொல்லாமல் சொல்லிக் கொடுத்துள்ளார். இதனாலேயே அவர் எனக்கு ஆசிரியராக மாறிப்போனார்.

கல்விக்கான நிதியுதவி செய்யும் இவருக்கு கல்லூரி படிக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூளையில் என்னதான் நடக்கிறது என்று நான் நினைப்பதுண்டு. நீங்கள் ஏன் இப்படி இருந்து என்னை போன்றோரை தொந்தரவு செய்கிறீர்கள்? பேசாமல் எங்களைப் போல் இருந்துவிட்டு போனால் என்ன? என்று நான் அடிக்கடி மனதிற்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். அவரிடம் ஏதேனும் குறை கண்டுபிடிக்க முடியுமா என்று நான் நினைப்பதுண்டு. முடியாமல் என்ன, கண்டிப்பாக முடியும். பூத்துக்குலுங்கும் மலர் தோட்டத்தில் முற்செடியை தேடிச்சென்றால் கிடைக்காமல் போகுமா என்ன?

வியாழனன்று மதியம் நான் தில்லை அவளின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். சிறிது நேரத்திலேயே கதிர் மற்றும் ஹரி வந்து சேர்ந்தார்கள். ஹரியைப் பற்றி பிறகு கூறுகிறேன். யாருடைய காரில் செல்வதென்று சின்ன வாக்குவாதத்திற்கு பிறகு தில்லை அவர்களின் பழைய காரில் செல்லலாம் என்று முடிவானது. பூஜை சாமான்கள் , முப்பது பேர் அமர்ந்து செய்ய தகுந்த பெரிய ஜமுக்காளம், மைக், ஸ்பீக்கர் என்று எல்லாம் உள்ளே ஏற்றி அகல்யாவுக்கு டாட்டா காட்டி விட்டு புறப்பட்டோம். கதிருடன் சண்டையிடக்கூடாது என்ற சங்கல்பம் முப்பது கிலோமீட்டருக்குள்ளாகவே காலாவதியாகிப் போனது. ஆசிரியர் அருகில் இருக்கிறார் என்ற எண்ணமே எங்களை அடக்கி வாசிக்க வைத்தது. அவர் பெரும்பாலும் எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் மட்டுப் படுத்திக்கொண்டும் வந்தார். ஹரி அமைதியாக கவனித்த வண்ணம் வந்தார்.

நிகழ்விடத்திற்கு அருகில் வரும்போதே நகரின் ஒழுங்கை கைவிட்டு வேறொரு ஒழுங்கிற்கு மனம் தயாராவதை உணர்ந்தேன். வந்து சேர்ந்ததும் அந்தியூரார் எங்களை வரவேற்றார். எனக்கும் கதிருக்கும் ஒரே அறை தான் வாய்த்தது. ஆசிரியரும் ஹரியும் ஒரு அறை எடுத்துக்கொண்டனர். பயணக் களைப்பை நீக்கியவுடன் நிகழ்வரங்கிற்கு நாங்கள் கொண்டு வந்த ஜாமானங்களை எடுத்து சென்றோம். ஆசிரியர் மைக் மற்றும் ஸ்பீக்கரை பொருத்தி சோதித்தார். ஹரி மேடையை சுத்தம் செய்து வெண்வஸ்த்திரம் விரித்து அதன் மீது விளக்கு பொருத்தி ஒரு சிறிய சந்நிதியை உருவாக்கினார். நானும் கதிரும் அரங்கை கூட்டி சுத்தம் செய்து, நாற்காலிகளை துடைத்து மூன்று வரிசைகளாக வைத்து, நிகழ்விற்கு தேவையில்லாத பொருட்களை அகற்றி வைத்தோம். வகுப்பிற்கு தேவையான ஒரு புறச்சூழல் இன்னும் இன்னும் மெருகேறி வருவதைக் கண்டோம்.

அறைக்கு சென்றதும் அன்றைய பயிற்சியை முடித்து விடுவோம் என்றார் ஹரி. ஆசிரியரும் ஹரியும் பாயை விரித்து அதில் வஜ்ராசனத்தில் அமர்ந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன். அன்று ஆசிரியருடன் எனது யோக பயிற்சியை சேர்ந்து செய்தேன். முடித்தவுடன் நான் செய்யும் சில தவறுகளை சரி செய்தார். எல்லாம் முடித்தவுடன் தான் தெரிந்தது அன்று சமையல் செய்பவர் வரவில்லை என்றும் வகுப்பிற்கு வந்திருந்த பாண்டுரங்கன் அவர்கள் சமையல் செய்து முடித்திருந்தார் என்றும். பாண்டுரங்கன் அன்று எங்களுக்கு அன்னமிட்டார்.

இரவுணவு முடித்து எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றார்கள். நாங்கள் ஆசிரியர் அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அவ்வப்போது நானும் கதிரும் வாக்குவாதம் செய்தோம். ஆசிரியர் முறைத்ததால் அமைதியானோம். அந்தியூரார் வந்தார். சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் பேசிக்கொண்டே சென்றோம். எப்படியோ சைவ சித்தாந்த மூல நூல் விவாதம் வந்தது. ஆசிரியருக்கு சைவ சித்தாந்தத்தின் மீது இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் இதுவரை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று. அந்தியூராரும் ஆசிரியரும் சேர்ந்து ஒரு சிறிய வகுப்பையே அன்று எடுத்து முடித்தார்கள். நான் கதிர் ஹரி அன்று வாய்பொத்தி கவனித்துக்கொண்டிருந்தோம். அது நல்ல பாடம்.

நானும் கதிரும் எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கினோம். இருவர் சண்டையிடுவதற்கு ஒரு பார்வையாளராவது தேவையல்லவா?

அடுத்தநாள் பத்து மணிக்கு வகுப்பு ஆரம்பித்தது. நாங்கள் இருபது பேர் இருந்தோம். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ஆசிரியர் யோகத்தைப் பற்றி சிறிய அறிமுகம் செய்து வைத்தார். எளிய முறை உடற்பயிற்சியில் ஆரம்பித்து, பிராணாயாமம், மற்றும் சில யோகா கருவிகள் எங்களுக்கு பயிற்றுவித்தார். கூட்டு தியானம், நுண்ணோக்கு பயிற்சி என்று முதல் நாள் சென்றதே தெரியவில்லை.

அடுத்த நாள் சில அகக்கருவிகள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்து அதில் பயிற்சி கொடுத்தார். முறையாக தியானம் நடப்பதற்கான கருவியை பயிற்றுவித்தார். நாங்கள் அனைவரும் அன்று தியானத்தில் அமர்ந்திருந்தோம். அது ஒரு பொண்ணனான அனுபவம். நான் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ஆசிரியரால் பயிற்றுவிக்கப் பட்டுள்ளேன். பல ஆண்டுகள் யோகக் கருவிகளை பயன்படுத்தியும் வந்துள்ளேன். கண்கள் மூடி பல முறை அமர்ந்துள்ளேன். என் வாழ்நாளில் மொத்தமாக தியானம் இரண்டு முறை தான் நடந்துள்ளது. அதுவும் ஒரு சில வினாடிகள் மட்டும்தான். ஆனால் அது ஒரு தரிசனம். அது மட்டும் தான் நான் உண்மையில் அடைந்த தரிசனம். இனி யார் எத்தனை கோடி வார்த்தைகளில் தியானம் என்பது பொய் என்று சொன்னாலும் எனக்கு தெரியும் தியானம் என்பது என்னவென்று. அந்த ஒரு சில வினாடிகள் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

தியான வகுப்பில் தியானம் நடந்ததா என்று கேட்டால், உறுதியாகச் சொல்ல முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இருக்கும் நிலையில் இருந்து மேலான நிலையில் கண்டிப்பாக இருந்தேன். இந்த தியான கருவிகள் தொடர்ந்து பயிற்சி செய்தால் இது வேலை செய்யும் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.

அமைதியாக இருந்த ஹரிக்கு அன்று தியானம் நடந்தது என்று என்னால் சொல்ல முடியும். அவருடைய பொலிவு அதை காட்டிக்கொடுத்தது.

இதற்கிடையில் பல கூட்டுத் தியானம் நடந்ததும். ஓஷோவின் டைனமிக் தியானத்தைப் பற்றி படிக்கையில், என்ன பைத்தியக்காரத்தனம் இது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஆசிரியர் அதை சரியான முறையில் எங்களை அதில் ஈடுபடுத்தினார். எத்தனை சொற்களினாலும் சொல்லிவிட முடியாத அனுபவம் தான். அதை சிறிய அனுபவம் என்றார் ஆசிரியர்.

கடைசி நாள் தியான கருவிகளை மீண்டும் பயிற்சி செய்து அதை எங்கள் மனதில் எழுதினார். ஒரு கூட்டு தியானத்திற்கு பிறகு குருபூஜை நடந்தது. இறுதியில் அவரது குரு பரம்பரைக்கு ஆசான்களுக்கு உங்களுக்கு, எங்களுக்கு என்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்து வகுப்பை முடித்தார். அனைவரும் பொலிவுடன் காணப்பட்டார்கள். மனித முகம் உண்மையிலேயே அழகானதுதான்.

மொத்தத்தில் இந்த மூன்று என்ன நடந்தது?மனதால் மனம் பார்க்க வைத்தார். மனதிற்கு அப்பால் உள்ள ஒரு வெளியை அடையாளம் காட்டினார். ஆசை காட்டினார். அது அங்கிருக்கிறது என்று இனி எங்கள் எல்லோருக்கும் தெரியும்.புகைப்படம் எடுத்து உணவுண்டு பிரியாவிடை பெற்றோம்.

ஏற்கனேவே ஹரியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அவர் யோக சாதகர். இப்படியான ஒரு வகுப்பு நடக்கிறது என்பதை அறிந்து உதவிலாளராக தொண்டு செய்ய வந்தார். இந்த வகுப்புப்பிற்கு அவருடைய தொண்டு முக்கியமானதாக தெரிகிறது. பெரும்பாலான நேரம் அனைவரும் கண்மூடி அமர்ந்திருக்கும் நிலையில் எந்த இடையூறும் வராமல் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் முதல் முறை தியானம் செய்பவர்களாதலால் அவர்கள் எந்த அசௌகர்யமும் வந்துவிடாமல் பார்க்க வேண்டும். புறத்தில் நடக்கும் சிறு சத்தமோ தொந்தரவோ அவர்கள் அகவெளியில் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவார்கள். அது நடக்காமல் பார்ததுக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கும் முன்னமே வந்து அரங்கை சுத்தம் செய்து விளக்கேற்றி சம்புராணி போட்டு காத்திருப்பார். வகுப்பு முடிந்து அனைவரும் சென்ற பிறகு அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவார். பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அமைந்த நிலையம் அவரோடு இருக்கையில் எங்களுக்கும் பற்றிக்கொள்ளும். அந்த மலை வாசஸ்த்தலம் அவருக்கு மிகவும் பிடித்த விட்டது. எல்லோரை விடவும் அவ்விடத்தில் மகிழ்திருந்தவர் அவரே.

அமைதியாகவே இருக்கிறார், அவருள் அவர் ஆழ்ந்திருக்கிறார், ஆகையால் நாங்கள் பேசுவது எதுவும் அவர் வரை சென்று சேர்வதில்லை என்று நினைத்திருந்தோம். திரும்பி வரும் வழியில் ‘கருத்து, எண்ணம் எண்ணங்களுக்கு இடையில் உருவாகும் இடைவெளி’ என்று ஏதோ விவாதித்துக் கொண்டு வந்தோம். அப்போது ஹரி தனது அவதானிப்பை சொன்னார். கதிர் பரவசத்தில் துள்ளி எழுந்துவிட்டார். அகவெளி அனுபவங்களில் நிரூபணவாதம் சாத்தியமே அதற்கான அடிப்படை விதிகளின் ஏற்புடைத்தன்மைதான் இங்கு பிரச்சனை. இங்குள்ள இன்றைய நிரூபணவாதம் வெகு சமீபத்தியது என்றார்.

நான் ஆசிரியரைப் பார்த்து “உங்கள் மாணவன் மீது உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா?” என்று கேட்டேன். அவர் “பெருமைதான், ஹரி இப்படி ஏதாவது பேசுவதினால் அல்ல அவர் தொடர்ந்து செய்துவரும் யோக சாதகத்தினால் நான் பெருமை கொள்கிறேன்” என்றார். புறவெளி அகவெளியை எப்படி மாற்றி அமைக்க முடியுமோ, அதேபோல் அகவெளி புறவெளியை மாற்றியமைக்கும் என்பதை ஹரி எங்களுக்கு அன்று சொல்லாமல் நிரூபித்தார்.

கோவை வந்து எல்லோரும் சொல்லிக்கொண்டு பிரிந்து சென்றோம். இதோடு வகுப்பு முடிந்ததா என்றால் இல்லை. பயிற்சியை சரிபார்த்துக்கொள்ள மேலும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல மாதம் ஒருமுறை நேரிலும் ஆன்லைனிலும் சத்சங்கம் கூட்டுகிறார். அதற்கான அட்டவணை அனுப்பி வைத்தார். ஆர்வமுள்ளவர்களுக்கு மேல்நிலை வகுப்பு அவரிடம் செய்யலாம்.

ஒரு சொல் கூடாமலும் குறையாமலும் தன் எல்லைக்குள் நின்று ஆசிரியர் எங்களுக்கு சிறப்பாக பயிற்றுவித்தார். அவர்க்கு எங்கள் நன்றிகள். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஒவ்வொருவருக்குள்ளும் திரிசிரன் இருக்கிறான். முத்தலையன். ஒரு தலையன் ஓயாது செயல் புரிகிறான். இன்னொரு தலையன் ஓயாது போகத்தில் மயங்குகிறான். மூன்றாவது தலையன் இவர்கள் இருவரையும் ஓயாது பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்த மூன்று நாட்களிலும் இந்த மூன்றாவது தலையனை சிறிது அறிமுகம் செய்துகொண்டோம். அறிந்துகொண்டோம்.

– திரு.விஜயகுமார் சம்மங்கரை

எழுத்தாளர்


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/181820/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தியானம், திரளும் தனிமையும் – மோகன் தனிஷ்க்

தியானம், திரளும் தனிமையும் – மோகன் தனிஷ்க்

Sharings by Mohan Dhanishk

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம் , நலமே வேண்டுகிறேன்.

எல்லா வகையிலும் என்னை நிலை நிறுத்திக்கொள்ள உங்கள் சொல் கொண்டு அடுத்த 10ஆண்டுக்கான திட்டம் ஒன்றை முடிவு செய்தேன். விரைவில் உங்களிடம் பகிர்கிறேன்.என்னை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துவதில் சிறு குழப்பம் இருந்தது.

உங்கள் தளத்தில் ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களின் தியான பயிற்சி வகுப்பு பற்றி அறிந்தேன். உங்கள் எல்லோரின் நல்விருப்பம் வாய்ப்பு பெற்று தியான வகுப்பில் கலந்து கொண்டேன்.

இது என் முதல் அனுபவம். தில்லை செந்தில் sir வகுப்புகளை திட்டமிட்டிருந்த விதம் அனைத்து வயதினருக்கும்ஏற்ற கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.முதல்நிலையில் ஆசனங்களை தேர்வு செய்து தொகுப்பாக வழங்கியிருந்தார். இதிலிருந்து அடுத்தடுத்த நிலைக்கான சாத்தியங்களையும் விளக்கினார்.

பயிற்சிக்கான நேரம் , இடைவேளை, செய்முறை , குறிப்புகள் மற்றும் விளக்கம் வடிவமைத்த வகையில் தில்லை sir ஐ பணிவுடன் வணங்குகிறேன்.3நாட்கள் சிறு புன்னகையுடன் இருந்த முகம் மாறவே இல்லை.குருக்களுக்கு நன்றி சொல்லும் போது நெகிழ்ந்து விட்டார். குருமரபு, யோகமரபு, உடல் மனம் தியானம் கர்மா அக்கணத்தில் வாழ்தல் என பயிற்சி விரிவடைந்த விதம் பெரும் நிறைவு.ஆசிரியரின் தன்மை, பயிற்சிக்கான இடம் சூழல் ஆகியவை பெரும் ஆசிர்வாதம். பதற்றமான நெருக்கடி நேரத்தில், பெரும் செயல் தொடங்கும் முன் செய்ய வேண்டியதாக சைதன்ய யோகத்தை முக்கியமாக கருதுகிறேன்.

3 நாளில் தரிசனமாக அமைந்த நிகழ்வு முதல் 2 நாட்கள் வகுப்பு நடைபெற்ற  ஹாலுக்கு முன்னுள்ள குளம் வறண்டு வெடித்து இருந்தது. 2ம் நாள் நள்ளிரவில் பெய்த மழை மறுநாள் குலத்தின் வெடிப்புகளை நீரால் அநேகமாக நிரப்பியிருந்தது. இந்த நிறைவுடனும் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் பயிற்சியில் ஒவ்வொரு நாளும் அமர்வேன்.யோகம் நிகழும். குளத்தில் நீர் பெருகி அலை ததும்பும். ஹரி ,மணி அண்ணா, உணவளித்த அய்யா மற்றும் மயில்களுக்கு நன்றி.

இப்படிக்கு

மோகன் தனிஷ்க்

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/181438/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

.

தியானம், திரளும் தனிமையும் – விஷ்ணுவர்த்தன்

தியானம், திரளும் தனிமையும் – விஷ்ணுவர்த்தன்

Sharings by Vishnuvarthan:

அன்புள்ள ஜெயமோகன் ,

திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன் உடல், மனம் ஆகியவற்றுக்கு உரிய தொடர்பும், சுவாச  பயிற்சியின் மூலம் அவற்றின் மீது கட்டுபாடு அமையும் என  பயிற்றுவிக்கபட்டது. பின் பிராணயாமம் மற்றும் தியான பயிற்சிகள்.

அடுத்த வகுப்பில், கணம் என்ற சொல்லை விளக்கி, தியான பயிற்சி மூலம் அந்த கணத்தில் வாழ்தல் சாத்தியம் என  நிறுவினார். அன்றாட வாழ்விற்கு தேவையான கருவிகளும் (Life tools) கூறபட்டன.

அ) without prejudice –  முன் முடிவு, முன் அனுபவங்கள் மூலம் அந்த கணத்தை எதிர்கொள்வதால் புதிய சாத்தியங்கள் தடைபடுதல்

ஆ) acceptance – அந்த கணத்தை ஏற்று கொள்ளுதல். இங்கு ஏற்று கொள்ளுதல் என்பது சகிப்பு தன்மை அல்ல. சகிப்புதன்மை அதிக ஆற்றலுடன் ஒரு நாள் வெளிபட்டு விடும். மாறாக, அந்த கணத்தை  விழிப்புணர்வுடன் கவனிக்கும் போது, சூழ்நிலையை ஏற்று கொள்வது நமக்கு தேர்ந்தெடுக்க கூடிய ஒரு வாய்ப்பாக அமையும். எளிமையாக, ஏற்றுகொள்வது என்பது அனுமதிப்பது. தேவையற்ற தனிப்பட்ட அனுபவங்களோடு (எண்ணங்கள், இச்சைகள்) போராடாமல் நமக்குள் வந்து செல்ல அனுமதிப்பது.

இ) Responsibility (ability to respond)- பொறுப்பை நேர்மறையாக ஏற்று கொள்ளுதல்.

தில்லை அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி,

விஷ்ணுவர்த்தன்.

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

https://www.jeyamohan.in/181236/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தவற்றை எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தியானம், கடிதம் – சிசுபாலன்

தியானம், கடிதம் – சிசுபாலன்

Sharings by Sisubalan:

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த வகுப்பை ஒருங்கமைத்த அனைவருக்கும் ஹரி,  அந்தியூர் மணி அண்ணா அவர்களின் அர்ப்பணிப்புக்கும்   உளம் கனிந்த நன்றிகள்,  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும் குருமார்கள்  அனைவருக்கும் பாதம் பணிந்து வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறை கடிதம் எழுதுவதால், சிறிய பதற்றம் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள்,  ஆசிரியரின்  சிரிப்பு மிக அழகாக இருந்தது. அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள்  வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள்.

எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில்  முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன்  இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத  மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய  தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள். 

அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும்  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல.

குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள்,  ஆசிரியரின்  சிரிப்பு மிக அழகாக இருந்தது. அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள்  வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள், எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில்  முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன்  இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத  மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய  தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள்.  அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும்  ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல

கர்ம யோகம் பற்றிய அவரின் சிறிய எளிமையான விளக்கம் அருமையாக இருந்தது. நிலை செயல் அதன் பொருட்டு  பெறும் பொருள் என அருமையாக எடுத்துக்காட்டுடன் கூறினார். நீங்கள் முன்னிறுத்தும் ஆளுமைகள் அனைவரும் வியக்கத்தக்க பெருச்செயல் ஆட்ருபவர்கள் அவர்களிடம் உடன் இருப்பதை பெரும் பேறாக உணர்கிறேன். உங்களுடன் சேர்ந்து செயலாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் ஜெ .

உங்கள் அன்புள்ள மாணவன்

சிசுபாலன்

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


Responsed by: Writer Jeyamohan:

அன்புள்ள சிசுபாலன்

தியானமுகாம் சிறப்பாக நிகழ்ந்தது என்று பங்குகொண்டவர்கள் அழைத்துச் சொன்னார்கள். அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக வெவ்வேறு தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள். அவர்களுக்கு இது மிகப்புதிய அனுபவமாக இருந்தது. இதிலிருந்த தனிப்பட்ட கவனிப்பும், நேரடியாக ஓர் ஆசிரியருடன் தங்கி பயிலும் அனுபவமும் எவ்வளவு முக்கியம் என உணர்ந்ததாகச் சொன்னார்கள். இதுதான் பல நூற்றாண்டுகளாக இங்கே நிகழ்ந்து வந்த செயல்பாடு. அகப்பயிற்சிகள் எல்லாமே ஆர்வமும் கொஞ்சம் அர்ப்பணிப்பும் உடைய சிலருக்காகவே நடத்தப்பட வேண்டும். அதன்பொருட்டு கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் பயிலமுடியாதவர்களால் அதற்குள் செல்லமுடியாது. அத்தகையோர் பங்குபெறும்போது மற்றவர்களாலும் சரியான முறையில் கற்கமுடியாது. இதுதான் பெருந்திரள் பயிற்சிகளின் குறைபாடு. ஆகவே இதை ஏற்பாடு செய்கிறோம். என்னைப் பொறுத்தவரை சரியானவர்களைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே என் பணி. இந்த வகுப்பு தொடர்ந்து நிகழுமென நம்புகிறேன்.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்


https://www.jeyamohan.in/181189/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்ததும் அதற்கு எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பதிலும் அடங்கிய இணைய கட்டுரையின் தொகுப்பு.

தியானம், திரளும் தனிமையும் – குமார் சண்முகம்

தியானம், திரளும் தனிமையும்  – குமார் சண்முகம்

Sharings by Kumar Shanmugam:

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது. தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக அன்றாட வாழ்க்கையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை உபயோகப்படுத்தி பார்க்கும் படியாக மிக்க உறுதுணையாக இருக்கும் என்று தோன்றுகிறது. மிகக்குறைந்த  நபர்களே இருந்ததால் அவரோடு உரையாட அவர் நாங்கள் செய்யும் பயிற்சிகளை எளிதாக சரிபார்த்து சொல்ல ஏதுவாக இருந்தது.

இரண்டாம் நாள் எதிர்பாராமல் மழை பெய்தது ஒரு நல் ஆசீர்வாதமாக தோன்றியது.உணவு உபசரிப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடு மணி அண்ணா மற்றும் சமையல் கலைஞர்கள் பொம்மன் மிகச் சிறப்பாக இருந்தது.

பல்வேறு கூட்டு தியானங்கள், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள்,கேள்வி பதில்கள் என வகுப்பு மிகச் சிறப்பாக திட்டமிட பட்டிருந்தது.இது போன்ற விஷயங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும்அதற்கு சூழல் அமைத்துக் கொடுத்த உங்கள் எண்ணத்திற்கும்மிகுந்த நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றோம்.

அன்பும் நன்றியும்

குமார் சண்முகம்

(பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நடைபெற்ற தியான வகுப்பில் பங்கேற்றவர்)


Responsed by: Writer Jeyamohan

அன்புள்ள குமார்,

தில்லை செந்தில்பிரபு அவர்கள் தொழில்துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்து அதைத் துறந்து மிகப்பெரிய அமைப்பொன்றில் முழுநேர உறுப்பினராக ஆனார். பல ஆண்டுகள் புகழ்பெற்ற தியானப் பயிற்றுநராக இருந்தார். பலநூறுபேர், ஆயிரம்பேர் கலந்துகொள்ளும் முகாம்களை நடத்தியிருக்கிறார். அந்தப் பெருந்திரள் தியான முறையின் குறைபாட்டைக் கண்டு ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் தொழில்துறையில் இறங்கி பணியாற்றுகிறார். கூடவே கல்விப்பணி, தியானப்பயிற்றுமுறைகள் ஆகியவற்றைச் செய்து வருகிறார். எனக்கு நன்றாகவே தெரிந்தவர்.

தியான – யோகப் பயிற்சிகளில் பெருந்திரள் நிகழ்வுகளுக்கு ஒரு நடைமுறைப்பயன் உண்டு. பெருந்திரளுடன் இருப்பது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. உற்சாகமான மனநிலை அமைகிறது. விழாமனநிலை அது. அது தேவை. ஆனால் உண்மையான பயிற்சி சிறிய அளவிலேயே நிகழமுடியும். ஆசிரியரை மாணவர் அறிவது முக்கியமல்ல, அறியவும் முடியாது, அறிந்ததுமே அவரும் ஆசிரியர் ஆகிவிடுவார். ஆனால் ஆசிரியர் மாணவரை தனிப்பட்ட முறையில் அணுக்கமாக அறிந்து வழிகாட்டவேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உடனிருக்கவேண்டும்

இந்த பயிற்சிகள் வழியாக உத்தேசிப்பது அதுவே. நான் எல்லாவற்றிலும் பொதுவாக இருப்பவற்றுக்கு எதிராக ஒரு மாற்று சொல்கிறேன்.  அதற்கு ஒரு வழியும் அமையட்டுமே, சிலருக்காவது பயன்படும் என்பதே நோக்கம்.

அன்பும் நன்றியும்

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்


https://www.jeyamohan.in/181157/ இது ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் (2023) ஈரோடு அருகே நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்ததும் அதற்கு எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பதிலும் அடங்கிய இணைய கட்டுரையின் தொகுப்பு.